வெள்ளி, 12 மார்ச், 2010

கதவை திற கட்டழகி வரட்டும் .....!!!





கதவை திற காற்று வரட்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தவர், கொஞ்சம் கவனிக்காமல் கதவை திறந்து வைத்ததால் அவரின் படுக்கையைறையில் காமிர நுழைந்து இப்பொழுது டீவிக்களில் நித்தியானந்தரின் காமக்களியாட்டம் அரைமணி நேரத்திற்கொருமுறை நவராத்திரி பூஜையாக ஓடுகிறது.
முன்பு நினைத்தவுடன் அந்த பின்நவீனத்துவ எழுத்தாளரின் எதிரில் திடீரென்று காரில் கடந்து போகும் நித்தியானந்தர், இனி நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் உங்கள் செல்போன்களில் சிரித்தபடி ஒரு பெண்ணுடன் காட்சி தருவார்..
நித்தியானந்த சுவாமிகள், பக்தர்களுக்கு ஜீவன முக்தி கொடுத்து, தியான பீடம் நடத்தி, வாழக்கை வாழ கற்று கொடுத்துக்கொண்டிருந்தவர் ஒரு சில நொடி சலனப்படத்தால் இப்பொழுது சலனப்பட்டுக் கொண்டிருக்கலாம்!
____________ _________ _________ _____
திருவண்ணாமலையில் பிறந்த ராஜசேகர் ஏதோ குறி சொல்லிக் கொண்டிருந்த பையனாக இருந்தவர் ஒரு இனிய நாளில் கார்ப்பரேட் சுவாமியாக களமிறக்கப்பட்டார். அகமுடை முதலியார் எனும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த இந்த பையன் ஆரம்பத்தில் கொஞ்சம் ஆன்மீகம், நிறைய சரக்கு என்று சுற்றிக் கொண்டிருந்தான். திருவண்ணாமலையில் ஓரளவு கணிசமாக வாழும் இந்தச்சாதிப் பிரமுகர்கள்தான் நித்தியானந்தாவை திட்டமிட்டு உருவாக்கினர். அரசியலில் அண்ணா, அன்பழகன் என்று பெரும் கைகள் உருவாயிருந்த இந்த சாதி வட தமிழகத்தில் எல்லா விதங்களிலும் முன்னேறிய சாதியாகும். எல்லாத் துறையிலும் கொடி கட்டிப் பறந்த இவர்களுக்கு ஆன்மீகத்தில் மட்டும் ஆளில்லை என்ற போது இந்தப்பையன் கிடைத்தான்.
ஆனந்த விகடனில் சுகபோதானந்தா மனசே ரிலாக்ஸ் என்று பக்தர்களை பரவசப்படுத்திக் கொண்டிருந்த போது குமுதம் போட்டிக்காக நித்தியை ஆரவாரமாக இறக்கியது. சில வருடங்களுக்குள் நித்தியானந்தா கார்ப்பரேட் தரத்தை அடைந்து விட்டார்.
கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேல் சென்னை புத்தகக் கண்காட்சியில் நித்தியானந்தா ஸ்டாலுக்கு சென்று பார்த்தால் ஏகப்பட்ட புத்தகங்கள், ஒளிக் குறுந்தகடுகள், திரும்பிய இடமெல்லாம் விவேகானந்தர் போல, பரமஹம்சர் போல, முண்டாசு கட்டி, சிரித்தவாறு, என்று என்னன்னமோ தினுசுகளில் படங்கள்……….என்னடா ஒரு அரைலூசுப் பையன் இந்த போடு போடுகிறானே என்று தெரிந்தவர்களுக்கு ஆச்சரியம்.
____________ _________ _________ _____
பெங்களூரு மைசூர் சாலையில் புறநகரில் பல பத்து ஏக்கர் நிலத்தில் நித்தியானந்தாவின் தலைமை ஆசிரமம் இருக்கிறது. நவீன பளிங்குகள் பதிக்கப்பட்ட கட்டிடங்களைப் பார்த்தால் அது ஆசிரமம் அல்ல, ஐந்து நட்சத்திர விடுதி என்றே தோன்றும். விடுதிகள், தியான மண்டபங்கள், சாமி அருள்பாலிக்கும் அரங்குகள், புத்தக விற்பனை நிலையம் என்று எல்லா வசதிகளும் அங்கே நேர்த்தியாக இருக்கின்றன.
ஆங்கிலம், இந்தி மற்றும் இந்திய மொழிகள் தெரிந்த உதவியாளர்கள் பெண்களையும் உள்ளிட்டு எல்லா பக்தர்களையும் மொழிபெயர்த்து சாமியிடம் சேர்ப்பதும் பின்னர் சாமி தமிழிலும், கன்னடத்திலும் பேசுவதை பக்தர்களிடம் சேர்ப்பிப்பதுமாய் இருப்பார்கள். பல்வேறு தியான பேக்கேஜ்கள் காலத்தைப் பொறுத்து 2500, 5000, 10,000 என்று எழுதி வைத்திருக்கிறார்கள். காசுக்கேற்ற தோசை. அல்லது சேலம் சிவராஜ வைத்தியரின் சிட்டுக்குருவி லேகியம், தங்க பஸ்பம், சாதா செட், ஸ்பெஷல் செட் போலவும் சொல்லலாம்.

நித்தியானந்தா தமிழகத்தை விட கர்நாடகத்தில் அதிக செல்வாக்குடன் திகழ்ந்ததற்குக் காரணம் அரசியல்வாதிகள். முதலமைச்சர் எடியூரப்பா முதல் ஏனைய எதிர்க்கட்சி பிரபலங்கள் எல்லாம் சாமியின் தீவிர பக்தர்கள். அடுத்து குறுகிய காலத்தில் உடலையும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் பாதுகாப்பதற்கு விரும்பும் நவீன இளைய சமூகம் அதாவது ஜ.டி ஜென்டில்மேன்கள் ஆசிரமத்தை எப்போதும் நிரப்பி வந்தனர்.
திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையில் முக்கியமான இடத்தை நித்தியின் ஆட்களை கைப்பற்றி ஆசிரமம் வைத்திருக்கிறார்கள். இந்த இடம் குறித்து இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த சிலருக்கு உள்குத்து இருப்பதால் இப்போது இவர்கள் சாமி அம்பலப்பட்ட பிறகு எதிர்த்திருக்கிறார்கள். இரண்டு ஊர் ஆசிரமங்களையும் சேர்த்தால் நித்தியானந்தா பல கோடிகளுக்கு அதிபதி.
நித்தியானந்த சுவாமிகளின் ஆன்மீக வகுப்புக்கள பல சுயநிதிக் கல்லூரிகளில் நடந்திருக்கின்றன. தலைக்கு இரண்டாயிரம் ரூபாய் பிடுங்கிக்கொண்டு கல்லூரி முதலாளிகள் மாணவர்களை மிரட்டி கொண்டு வந்திருக்கின்றனர். சில கல்லூரிகளில் மாணவர்கள் எதிர்ப்பு காட்டியதும் அவ்வப்போது செய்தியாக கசிந்தது உண்டு.
அப்புறம் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நிம்மதியை இடைவிடாமல் தெடும் வெள்ளைத் தோல் மனிதர்கள் வந்து சாமியை கண்டம் கடந்து தூக்கி சென்றார்கள். இப்படியாக ஒரு இளைஞன் பக்காவான கார்ப்பரேட் சாமியாக நிலைபெற்றான்.
____________ _________ _________ ______
கார்ப்பரேட் சாமியார்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் உள்ள உறவு என்பது சொல்லில் புரியவைக்க கூடியதல்ல. ஏனெனில் அந்த உறவு ஒரு நேர்த்தியான மார்க்கெட் தந்திரம். சாமியாரின் அசட்டு பிசட்டு தத்துவ அவஸ்தைகளை விறுவிறுப்பான மொழியில் நுட்பமான கதை சொல்லாடல்களுடன் பக்தர்களிடம் அள்ளி வீசுவதற்கு நவீன இலக்கியவாதிகள் கட்டாயம் தேவை.
விசிறி சாமியாரைப் பற்றி பாலகுமாரன், சுகபோதானந்தாவிற்கு ஆனந்த விகடனின் உதவி ஆசிரியர்கள், ஈஷா யோக ஜக்கி வாசுதேவிற்கு இரட்டையர்கள் சுபா என்றால் நித்தியானந்தாவை குமுதம் பத்திரிகையே தத்து எடுத்துக் கொண்டது. ஆனாலும் குமுதம் விரும்பிய அளவிற்கு நித்தியானந்தாவின் பத்திகள் அவ்வளவாக எடுபடவில்லை.

____________ _________ _________ _________ ___
சாய்பாபா, பிரேமானந்தா, சங்கராச்சாரி, தேவநாதன் என்ற வரிசையில் இப்போது நித்தியானந்தா. ஆனாலும் நித்தியானந்தா செய்திருப்பது சட்டப்படி குற்றமல்ல. அவர் நடிகை ரஞ்சிதாவை பாலியல் வன்முறை செய்யவில்லை. இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தியிருக்கின்றனர். வேண்டுமானால் ரஞ்சிதாவிற்கு திருமணம் ஆகியிருந்தால் இது கள்ள உறவு. ஒரு வேளை அவர் விவகாரத்து பெற்றிருந்தால் இது கள்ள உறவும் அல்ல. ஆனால் இது ரஞ்சிதாவோடு மட்டும் இருந்திருக்கக்கூடிய உறவல்ல. ஊர்மேய்வதற்கு எல்லா ஏற்பாடுகளும் இருந்தால் ஒரு பொறுக்கி ஒன்றோடு நிறைவு பெறுவதில்லை.
தேவநாதனும் யாரையும் கற்பழிக்கவில்லை. இந்து ஆகம விதியின் படி கருவறையை பள்ளியறையாக பயன்படுத்துவது கல்லாலான சிலைகளுக்கு மட்டுமல்ல அந்த பேசா சிலைகளுக்கு தரகர்களாக இருக்கும் புரோகிதர்களுக்கும் உள்ள உரிமைதான் என்பதைக்கூட சாத்திரத்தை வைத்து நியாயப்படுத்தலாம். இப்போது தேவநாதன் ஜாமீனில் வெளியே கிராப் வைத்த தலையுடன் ஊர் உலகத்தில் செய்யாத தவறையா செய்து விட்டேன் என்று பேட்டி கொடுக்கிறான்.
சங்கரராமனை ரவுடிகளை வைத்து கொன்ற ஜெயேந்திரனும் கூட இப்போது எல்லா சாட்சிகளையும் பிறழ வைத்திருப்பதால் குற்றவாளியில்லைதான். மற்றபடி ஜெயேந்திரன் பெண்டாண்ட காட்சிகளை எந்த காமராவும் அவ்வளவு சுலபாமா எடுத்திருக்க முடியாது. அப்படி எடுத்திருந்தால் காமராக்காரன் இந்நேரம் பரலோகம் போயிருப்பான். நாளை நித்தியானந்தாவை மன்மதனாக சித்தரிக்கும் எல்லாப் பத்திரிகைகளும் ஜெயேந்தரனுக்கு பழைய லோககுரு பட்டத்தை எப்போதோ வழங்கி விட்டன.
சாய்பாபா ஆசிரமத்தில் நடந்த கொலைகளும், பாபாவின் பாலியல் வன்முறைகளை வெளிநாட்டு சானல்களே அம்பலப்படுத்தியிருந்தாலும் அந்த ஹிப்பித் தலையனின் செல்வாக்கு மங்கவில்லை. இன்றும் பிரதமர், குடியரசுத் தலைவர்கள் அங்கே அடிபணிந்தே வணங்குகிறார்கள். மற்றொரு கார்ப்பரேட் சாமியாரிணியான மாதா அமிர்தானந்த மாயியின் ஆசிரமத்திலும் கூட கொலைகள் நடந்துள்ளன. ஆனால் அம்மாவை யாரும் அசைக்க முடியவில்லை.
கந்து வட்டிக்காரனிடம் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை என்பதற்காக தற்கொலை செய்யும் விவசாயிகளின் நாட்டில்தான் இந்த இந்து மத சாமியார்கள் என்ற ஒரிஜனல் கிரிமினல்கள் சுத்த சுயம்புவாக வலம் வருகிறார்கள். இவர்கள் எவ்வளவுதான் அம்பலப்பட்டு போனாலும் இவர்களை மீட்டு வந்து பாதுகாப்பதற்கு ஆளும் வர்க்கங்கள் கர்ம சிரத்தையாக தயாராக இருக்கின்றன. வேறு எதனையும் விட மதநம்பிக்கைகள் உளுத்துப் போவதை அவர்கள் தமது வலிமையால் எப்போதும் ஒட்டவைத்து வருகிறார்கள்.
மக்களும் குறிப்பாக நடுத்தர வர்க்கம் இந்த ஊழலை மத வாழ்க்கையின் அங்கமாக ஏற்றுக்கொண்டு விடமால் பின் தொடர்கிறது. குறுக்கு வழியில் முன்னேறலாம் என்பது பொருளாதாரத்தில் கோலேச்சும்போது இந்த மோசடிப் பேர்வழிகளில் அவ்வளவு செல்வாக்கு இல்லாத சாமியார்களை போலிகள் என்று ஒதுக்கி வைத்துவிட்டு செல்வாக்குடன் திகழும் உண்மையற்ற சாமியார்களை நல்லவர்கள் என்று கொண்டாடப்படுகின்றனர். ஜெயேந்திரன் லீலைகள் சந்தி சிரித்துக்கொண்டிருந்த போது பார்ப்பனர்கள் மட்டும் கர்ம சிரத்தையாக பெரியவாள் தப்பு செய்யவில்லை என்று உறுதியாக நிற்கவில்லையா என்ன?
____________ _________ _________ ____
நித்தியானந்தாவாவோடு முரண்பட்ட ஆசிரமத்தைச் சேர்ந்த ஒருவரால் இந்த வீடியோ வெகு சிரத்தையாக எடுக்கப்பட்டு ஐந்து நாட்களுக்கு முன்னரே எல்லா ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் இதை யாரும் வெளியிட விரும்பவில்லை. பெரும்பாலான பத்திரிகைகள் கார்ப்பரேட் சாமியார்களை வைத்து தமது நடுத்தரவர்க்கத்து வாசகர்களுக்கு நன்னம்பிக்கை மற்றும் சுயமுன்னேற்ற மாயைகளை விதைத்து வந்தவர்கள் தங்களையே வில்லன்களாக காட்டுவதற்கு சம்மதிப்பார்களா என்ன?
சன் டி.வி இதைக் காட்டியதில் ஊடக முதலாளிகளிடம் உள்ள போட்டி பெரிதும் பங்காற்றியிருக்கிறது. கலைஞர் டி.வி தொடரில்தான் நடிகை ரஞ்சிதா நடித்து வருவதால் சன்.டி.விக்கு பாதிப்பில்லை. ஒரு வேளை சன் தொடர்புடைய நடிகைகளை கலைஞர் டி.வி காண்பிக்கும்பட்சத்தில்தான் சன்னுக்கு பிரச்சினை. ஆனாலும் இரண்டும் கழக கண்மணிகளின் சொத்து என்பதால் பெரிய பிரச்சினையில்லை.
நக்கீரன் பத்திரிகை நித்தியானந்தாவை வெளியிடுவதும் கூட போட்டி மற்றும் தனது குழும சாமியார் அல்ல என்ற தைரியம் மட்டும்தான். ஜக்கி வாசுதேவை நக்கீரன் உட்பட எல்லா பத்திரிகைளும் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றன என்பதும் இங்கே முக்கியம்தான். ஒருவேளை ஜாக்கிக்கு இது நடந்திருந்தால் இந்த விடயம் வெளியே வந்திருக்காது. ஏனெனில் எல்லா பத்திரிகைகளும் அவரது அன்பில் நனைந்தவைதான்.
____________ _________ _________ _________ __
கடந்த சில ஆண்டுகளாக நித்தியானந்தா புராணம் படித்த குமுதம் பத்திரிகை இதைப்பற்றி என்ன எழுதும்? பிரபலங்களின் காமக் களியாட்டங்களை ஆபத்தில்லாமல் கிசுகிசுவாக எழுதும் குமுதம் இப்போது தனது சாமியார் இப்படி அப்பட்டமாக சிக்கிக் கொண்டது குறித்து என்ன எழுதும்? அந்த பத்திரிகையை பத்து ரூபாய்க்கு வாங்கிப்படிக்கும் வாசகர்கள் என்ன கருதுவார்கள்?
யாரும் குமுதம் பத்திரிகைக்கு செருப்படி தரப்போவதில்லை என்பதால் சற்று காலம் கழித்து இது மறக்கப்படும் என்பதுதான் அவர்களின் நம்பிக்கை. நித்தியானந்தா கூட இது மோசடிப்புகார் என்று சவடால் விட்டு இதை நீதிமன்றத்தில் நீருபிப்பேன் என்று பேசமாட்டார் என்பதற்கு உத்திரவாதமில்லை.


தமிழ்மணி-

வியாழன், 21 ஜனவரி, 2010

காஞ்சிபுரம் பார்ப்பன குருக்களின் காமமும்- உடைத்தெறியப் பட்ட பார்ப்பனப் புனிதமும்…



பிராமணர்கள் யார்..?

எக்காரணம் கொண்டும் சரீரப் பிராயசைப் படாமலும் எவ்விதத்திலும் நஷ்டமோ, கவலையோ அடைய வேண்டிய அவசியமில்லாமலும் இருக்கத்தக்க நிலையில் இருந்து கொண்டு தங்கள் சமூகத்தைத் தவிர மற்றெல்லா மக்களுடையவும் உழைப்பால் திருப்தியால் உயிர் வாழ்க்கை வாழ்பவர்கள்



- தந்தை பெரியார் (19-09-1937 குடிஅரசு பக்கம் 9 )




சமீப காலமாக காஞ்சிபுரம் குருக்கள் தேவநாதனின் புகழ் தமிழ்நாட்டில் கொடிக்கட்டி பறக்கிறது. இளசுகளின் அலைபேசியில் குருக்களின் கருவறை லீலைகள் படங்கள் காட்டுத் தீயாய் பரவி வருகின்றன. இதற்கு முன்னால் காஞ்சிபுரம் ஜெயேந்திரர் மூலமாக உலகப் புகழ் அடைந்ததை நாம் அனைவரும் அறிவோம். அந்த வரிசையில் தற்போது தேவநாதன்.
இது முழுக்க முழுக்க பார்ப்பனர்களும், இந்து மதத்தின் சீரழிவும் சம்பந்தப்பட்ட விஷயம் என்றாலும் இந்து மத புனைவுகளால் கட்டமைக்கப்பட்ட சாதீய இழிவுகளால் பாதிக்கப்பட்டோர் என்ற முறைமையில் நாம் மகிழ சில சங்கதிகள் உண்டு.



உண்மையில் நாமெல்லாம் தேவநாதனை ஒரு வகையில் பாராட்டத்தான் வேண்டும். ஆலய கருவறை நுழைவுப் போராட்டம் என்பதனை நாம் வெகுநாட்களாக ஒரு லட்சிய இலக்காக வைத்து போராடிக் கொண்டிருக்கும் வேளையில், எவ்வித ஆர்பார்ட்டமும் இல்லாமல் சாதிகளை கடந்து பெண்களை கருவறைக்குள் அழைத்து சென்றிருக்கிறான் அவன். மேலும் கடவுள்ள அது: கல் தான் .. என நாம் காட்டுக்கத்தலாய் தெரு முனைகளில் கத்திக் கொண்டிருக்கின்ற வேளையில் வெகு சுலபமாக பாலாலும், தேனாலும் அபிஷேகம் செய்து படையல் வைத்து ஆயிரம் காலமாய் புனிதம் போற்றி தொழுகிற அந்தணர் பாதம் மட்டுமே பட்டு வந்த கருவறைக்குள் எல்லாவித தடைகளுக்கும் சவாலாய் சாதி வேறுபாடின்றி பெண் என்ற ஒற்றைத் தகுதியை மட்டும் பார்த்து கட்டிய குடுமியுடன் கட்டிப்பிடித்து ஆலிங்கணம் நடத்திய தேவநாதன் இத்தனை ஆண்டு காலம் பார்ப்பனர் கட்டி வைத்த பாரம்பரிய கோட்டையின் அடித்தளத்தில் குண்டு வைத்து தகர்த்திருக்கிறான்.



தேவநாதன் சாதிகளை கடந்த மனிதனாக, கல்லை கல்லாக மட்டும் உணர்கிற நாத்திகனாக நமக்குப் படுகிறான். தமிழர்க்கு எதிராக எது நடந்தாலும் குதூகலமாய் கொக்கரித்து செருமாந்த செறுக்கோடு செய்தி வெளியிடுகிற பார்ப்பன நாளேடு தினமலர் பார்ப்பனக் குருக்கள் தேவநாதனை பூசாரி தேவநாதன் என வில்லங்கமாய் விளித்து செய்தி வெளியிட்டது. குருக்கள் என்று வெளியிட்டால் அது பார்ப்பான் என பட்டவர்த்தனமாய் தெரிந்து விடும் என்பதால், சூத்திரப் பெயரான பூசாரி என்ற பட்டத்தோடு செய்தி வெளியிட்டது.
தேவநாதன் மிகவும் பட்டவர்த்தமனமாக, வீடியோ ஆதாரங்களோடு நடத்திய கருவறை காம லீலைகள் பார்ப்பன இந்துத்வாவின் புனித முகத்தினை சிதைத்து இருக்கிறது. சாதீய கட்டமைப்புகள், கோவில், புனித பூசைகள் என திட்டமிட்டு பார்ப்பனீயத்தால் கட்டமைக்கப்பட்ட இந்துத்வா கோட்டையில் தேவநாதன் மிகப் பெரிய விரிசல். தேவநாதன் தான் முதன் முதல் பார்ப்பன சீரழிவு அல்ல. இதற்கு முன்னால் கடந்த ஜெயலலிதா ஆட்சியில் கஞ்சா வழக்கு உட்பட ,அனுராதா ரமணன், சொர்ணமால்யா என தொடர்ந்த காமக் குற்றச்சாட்டுகளில் காஞ்சி மடம் சிக்கிய போது பார்ப்பன உலகம் அதிர்ந்தது. இதில் என்ன மிகவும் விசேசம் என்றால் வழக்கு தொடரப்பட்டது தன்னை சட்டமன்றத்தில் பாப்பாத்தி என வெளிப்படையாக அறிவித்துக் கொண்ட ஜெயலலிதா ஆட்சியில். சம்பந்தப்பட்ட ஒரு சிலரை தவிர அனுராதா ரமணன் ,சொர்ணமால்யா என அனைவரும் பார்ப்பனர்களே. இப்போது தேவநாதன் காஞ்சி மட சீரழிவின் நீட்சியாக திகழ்கிறான்.



ஒரு மனிதன் பூணூல், உச்சிக் குடுமி ,பஞ்சகஜ வேட்டி என அனைத்து விதமான பார்ப்பன சாதி மேலாண்மை சின்னங்களோடு பல ஆயிரம் ஆண்டுகளாய் புனித பிம்பமாய் பார்ப்பனர் திட்டமிட்டு நிறுவியுள்ள சாதீய கட்டமைப்புகளின் உச்ச சின்னமான கோவிலில், பிற சாதியினர் நுழைய கூட அனுமதி இல்லாத கருவறையை மூன்றாம் தர விபச்சார விடுதியாக பயன்படுத்தியது ஒழுக்கமும், தூய்மையும் பிறப்பின் அடிப்படையில் விளைவதல்ல என்பதனை நெற்றிப் பொட்டில் அறைந்து சொல்கிறது.
தந்தை பெரியார் சொல்கிறார்…



பார்ப்பான் உயிர் கடவுள் பொம்மையிலும், கல்லிலும் தான் இருக்கிறது. அவை ஒழிந்தால் பார்ப்பானை பிராமணன் என்றோ, சாமி என்றோ , மேல் சாதியான் என்றோ எவனும் மதிக்க மாட்டான்- தந்தை பெரியார் (3-12-1971 விடுதலையில்..)



பார்ப்பன, இந்து மதத்தின் உயிர் சின்னமான கடவுளர்களின் சிலைகளுக்கு முன்னால் தான் தேவநாதன் தன் லீலைகளை நடத்தி இருக்கிறான்.கல்லை எடுத்து, கற்றொளி கொண்டு..சிலை வடித்து, சிற்பம் செதுக்கி, ஆலயம் அமைத்து, கருவறை கட்டி..அந்த சிலையையும் தூக்கிக் கொண்டு நாம் உள்ளே கொண்டு போய் வைத்தால்..ஒரு சொம்பு தண்ணீரை கொண்டு குடமுழுக்கு நடத்தி கோவில் கட்டிய நம்மை வெளியே நிற்க வைத்து ..அழகு பார்த்த பார்ப்பனீய இந்து மத பிரதிநிதியான தேவநாதன் கடவுளை போற்றும் சிறப்பு இதுதான்.



ஆனால் இதையெல்லாம் உணராத தமிழ்ச்சமூகம் கண்ணீர் மல்க கடவுள் பக்தியோடு கைக்கூப்பி நின்று கையேந்தி வரும் பார்ப்பான் தட்டில் காசு போட்டு கொண்டிருக்கிறது.



தேவநாதன் ஒருவன் அல்ல. இவனைப் போல நாட்டில் ஏராளமான குருக்கள்,சாமியார் வகையறாக்கள் ஏராளம் உள்ளனர். இப்படி கேடு கெட்டவர்கள் கையால் தான் திருநீறு பூசிக் கொண்டு ,தமிழன் அலகு குத்தி காவடி தூக்கிக் கொண்டு திரிகிறான்.



தீண்டதகாதவன் என்ற ஒற்றை காரணத்தினால் நந்தனை கோவிலுக்குள் அழைக்காத கடவுள் நந்தியை நகர்த்தி வைத்து தரிசனம் காட்டினாராம். நந்தியை நகர்த்த முடிந்த கடவுளுக்கு கூட சாதீயத்தினை உடைத்து நந்தனை கோவிலுக்குள் அழைக்க முடியவில்லை. கடவுள் கூட செய்ய முடியாத பிற சாதீயினரை கருவறைக்குள் நுழைவினை தேவநாதன் மிக எளிமையாக தன் காமத்திற்காக நிகழ்த்தி தன்னுடைய கேடு கெட்டத் தனம் கடவுளை விட உயர்ந்தது அல்ல என்பதனை நிருபித்து இருக்கிறான்.இதில் நாமும் யோசிக்க வேண்டிய விஷயம் என்னவெனில்.. தமிழனின் கருவறை நுழைவு இப்படி யாருக்கும் தெரியாமல் காமத்தின் பாற் கேடு கெட்டத்தனமாய் விளையாமல்..சாதிகளை துறந்த சமத்துவ நோக்கில் கலகம் வாய்ந்த புரட்சியாக நிகழ வேண்டும் என்பதே.



தேவநாதனை விளக்குமாற்றால் அடிக்க பெண்கள் பாய்கிறார்கள். இதையெல்லாம் தனக்கு முன்னால் நிகழ்த்திக் கொண்டு இன்னும் கல்லாக சமைந்து நிற்கும் கடவுளின் சிலைகளை இவர்கள் எக்காலத்தில் எதனைக் கொண்டு அடிக்கப் போகிறார்கள்.?



தந்தை பெரியார் தன் வாழ்நாட்கள் முழுவதையும் தமிழர்களிடையே பிரச்சாரம் செய்து வந்ததை தேவநாத பார்ப்பான்கள் தங்கள் நடத்தைகள் மூலம் நிரூபித்து காட்டுகிறார்கள்.

இந்த நிகழ்வு மூலம் கோவில் ,சிலைகளின் எல்லையற்ற அதிகாரமும், புனிதமும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.பார்ப்பன மேலாண்மையின் சீரழிவு வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.



பார்ப்பன லீலைகளை ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டிய தேவநாதனுக்கு நாம் நன்றி சொல்வதோடு..இனியாவது பார்ப்பானிடம் ஏமாறாத சமூகம் தமிழ்ச் சமூகம் அமைய உறுதி கொள்வோம்.




நன்றி:-நாம் தமிழர் இயக்கம்

'தீய சக்திகளிடமிருந்து தமிழகத்தை காப்பதற்காக'.......!!!


'தீய சக்திகளிடமிருந்து தமிழகத்தை காப்பதற்காக' கூட்டணி சேர்வதென்று முடிவெடுத்திருக்கிறார் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த். கூடவே வருகிற ஏப்ரல் முதல் இந்த 'தர்ம' யுத்தத்திற்காக டிவி சேனல் ஒன்றையும் தொடங்குகிறார். அதன் பெயர் கேப்டன் டிவி. கலைஞர் டிவி இருக்கும் போது, கேப்டன் டிவி இருக்கக்கூடாதா? அதனால் சன் டிவி, ஜெயா டிவி, மக்கள் டிவி, வசந்த் டிவி வரிசையில் இன்னொரு அரசியல் பின்புலம் கொண்ட சேனல் தமிழக 'தொலைக்காட்சி ஜனநாயகத்திற்கு' உரம் சேர்க்கப் போகிறது. தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்களின் வீட்டு வரவேற்பறையில் செய்தி என்ற பெயரில் சற்று அதிகமாக கொட்டப் போகிறது அரசியல் குப்பை.
விஜயகாந்த் இந்த இடத்திற்குத்தான் வந்து சேர்வார் என்பது தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரம் அந்த நாள் வந்து சேரும் என்று நினைக்கவில்லை. தொடர்ச்சியான இடைத் தேர்தல் தோல்விகள், டெபாசிட் இழப்புகள் அவரை கனவுலகிலிருந்து யதார்த்த உலகிற்கு இழுத்து வந்திருக்கிறது. தனிக் கட்சியாகவே ஆட்சியை பிடிக்க முடியும் அல்லது அதிகாரத்தை அடைய முடியும் என்ற கனவை அவர் நம்பினார் என்று நான் ஒரு போதும் சொல்ல மாட்டேன். ஆனால் விஜயகாந்தின் ரசிகர்களும் அரசியல் முகவரி தேடி அவர் பின்னால் அடைக்கலமானவர்களும் அதை நம்பினார்கள். அந்தக் கனவு அவர்கள் மத்தியில் கலையத் தொடங்கிய சமயத்தில் அவர்களுக்கு வேறு கனவுகளை விற்க வேண்டியிருக்கிறது. அதனால் இப்போது கூட்டணிக் கனவுகளை வளர்க்கிறார் விஜயகாந்த். திராவிட நாடு கனவை வளர்த்தவர்கள் ஓர் நாளில் அதை உடைக்கவில்லையா? பி.சி.சொர்க்காருக்கு திராவிட அரசியல்வாதிகள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல. ராபின்சன் பூங்காவில் அவதரித்த இரு இயக்கம் பின்னாளில் வெளிப்படுத்திய அரசியல் தந்திரங்களை ராம அவதாரம் கோலிவுட் வரை பரப்பிவிட்டதை விஜயகாந்தின் ஒவ்வொரு காய் நகர்த்தலும் காட்டுகிறது.
ஒரு உயரிய சமூக நோக்குடன் உருவாகி, பல புரட்சிகளை சாத்தியமாக்கி, நடுவில் வழி தவறி, இன்று சீரழிவின் விளிம்பில் நிற்கிறது திராவிட இயக்கம். ஆனால் எடுத்தவுடனேயே அதன் சீரழிவுகள் அத்தனையையும் பிரயோகிக்கும் கட்சியாக உருவாகியுள்ள ஒரு புதிய கட்சி தன்னை அந்த திராவிடக் கட்சிகளின் மாற்று என்று சொல்லிக்கொள்கிறது. 'தனியாக ஆட்சியைப் பிடிப்போம்' என்ற பொய்யை போட்டு ஆரம்பிக்கப்பட்ட கட்சி, இன்று வேறொரு நம்பத்தகுந்த பொய்க்கு மாறியிருக்கிறது. பெயருக்குகூட கொள்கை, சித்தாந்தம் பற்றி சொல்லிக்கொள்ள வேண்டிய அவசியம் தே.மு.தி.கவுக்கு இல்லை. விஜயகாந்த் சொல்வதெல்லாம் அந்தக் கட்சியின் கொள்கை. அவர் மனைவியும் மச்சானும் சொல்வதெல்லாம் கட்சியின் சித்தாந்தம். அதிகாரத்தில் பங்கெடுப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட அவரது கட்சிக்காரர்களுக்கு இதில் ஆட்சேபணைகளோ கருத்து வேறுபாடுகளோ இருக்க வாய்ப்பில்லை. ஆனால் பொது மக்கள் என்று அறியப்படுகிறவர்களுக்கு? தனி நபர் துதிபாடல் மேலோங்கியிருக்கும் தமிழ்ச் சமூகத்தில் இதில் ஆச்சரியங்கள் ஏதுமில்லை. கட்சியின் தானைத் தலைவர் அல்லது தலைவி அன்றன்றைக்கு என்ன சொல்கிறாரோ அதுதான் கட்சியின் கொள்கை. ஏற்கனவே அ.தி.மு.கவில் இதுதான் நடைமுறையில் இருக்கிறது. ஒரு கட்சியின் லட்சக்கணக்கான தொண்டர்கள் சார்பாக முடிவெடுக்கும் அதிகாரம் பெற்ற செயற்குழு கூடி, முடிவெடுக்கும் அதிகாரத்தை தலைவரிடம் ஒப்படைக்கும் அரிய அரசியல் 'ஜனநாயகத்தைக்' கொண்ட தேசம் இது.
இன்றைய தமிழகச் சூழலில் தங்கள் கட்சியை வளர்க்கவும் காக்கவும் சொந்தமாக ஒரு சேனல் வேண்டும் என்று எல்லா அரசியல் கட்சிகளும் நினைக்கின்றன. வெற்றி பெற்ற படத்தை காப்பியடிக்கும் சினிமா இயக்குனர்கள் போல ஒவ்வொரு கட்சியும் தி.மு.கவின் பாணியில் சொந்தச் சேனல்கள் தொடங்குகின்றன. மச்சான் சுதீஸின் கட்டுப்பாட்டில் விஜயகாந்தின் சேனல் 'செய்தி சார்ந்த நிகழ்ச்சிகளையும்' ஒளிபரப்பப் போகிறது. உண்மையான நோக்கம் அதுதானே. அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலம் கிடைக்கும் வரவேற்பை பயன்படுத்தி தங்கள் அரசியல் செய்திகளை கலந்து அனுப்ப வேண்டியதுதான் (நியாயப்படி அரசியல் சார்ந்த சேனல்களின் செய்தியை கலப்பட தடைச் சட்டத்தின்கீழ் தடுத்து, அதை வெளியிடுபவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்!).
இந்தியா சுதந்திரம் பெற்ற காலக் கட்டத்தில் சினிமா தொழில்நுட்பமும் வேகமாக வளர்ச்சியடையத் தொடங்கியது. சினிமாவின் சாத்தியங்கள் முழுமையாக அறியப்பட தொடங்கின. அந்தக் காலக் கட்டத்தில் சினிமாவை தனது கருவியாகக் கொண்டு தி.மு.க தன்னை வளர்த்துக்கொள்கிறது. அதற்கு இணையாக, தொலைக்காட்சியின் சாத்தியங்கள் தெரியத் தொடங்கிய 90களில் சன் டிவி வடிவத்தில் தி.மு.க சின்னத் திரையையும் தனது அரசியல் கருவியாக பயன்படுத்தத் தொடங்கியது. மு.கருணாநிதியின் நள்ளிரவுக் கைது, தர்மபுரி பஸ் எரிப்பு என பல்வேறு அரசியல் நிகழ்வுகள், தி.மு.கவுக்கு எவ்வளவு சாதகமாகத் திருப்ப முடியுமோ அவ்வளவுக்கு உணர்ச்சிப்பூர்வமாக அல்லது நாடகத்தனமாக காட்டப்பட்டன. சமீபத்தில் கருணாநிதி குடும்பத்தில் ஏற்பட்ட தற்காலிக பிளவு காரணமாக கலைஞர் டிவி என்ற புதிய வாகனமும் தி.மு.கவிற்கு கிடைத்திருக்கிறது. தி.மு.கவிடமிருந்து பிந்தங்கிவிடக்கூடாது என்பதால் அ.தி.மு.கவிடம் முன்பு ஜே.ஜே டிவி இருந்தது, இப்போது ஜெயா டிவி இருக்கிறது. அதன் வீச்சையும் வீரியத்தையும் தி.மு.கவின் டிவி ஆயுதங்களுடன் ஒப்பிட முடியாது என்றாலும் அவர்களுக்கும் சில தாக்குதல் சம்பவங்களும் அரசியல் பிரச்சனைகளும் கிடைக்கத்தான் செய்கின்றன. சினிமாவில் தி.மு.கவால் செய்ய முடிந்ததை பிற கட்சிகளால் நகலெடுக்க முடியாவிட்டாலும் தொலைக்காட்சி அதற்கான பலவீனமான வாய்ப்பைக் கொடுக்கிறது. டிவி சேனல் நடத்துவதற்கான அலைவரிசை, ஒளிபரப்புவதற்கான கருவிகளுக்கான செலவு முன்பைவிட கணிசமாக குறைந்துவிட்டது. தொலைக்காட்சி பெட்டி உள்ள வீடுகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதால் விளம்பரதாரர்களும் கிடைக்கிறார்கள்; குறைந்தபட்ச உத்தரவாதமாக ராசிக்கல், நியூமராலஜி, ஆன்மீகம் என எதற்காவது நேரத்தை விற்றுவிடலாம். 2006ல் கட்சியை தொடங்கிய விஜயகாந்த் வரை டிவி சேனல் மோகம் வந்திருக்கிறது.
டிவியை பொறுத்தவரை பார்வையாளர்களுக்கு ரிமோட் கன்ட்ரோல் பெரிய சுதந்திரத்தைக் கொடுக்கிறது. எந்தக் கட்சி எந்த சேனலை வைத்திருக்கிறது என்பது வெளிப்படையானது என்பதால் பொது வாக்காளர்களை எட்டுவதற்கு பதில் அந்தந்த கட்சி சார்ந்த சேனல் தங்கள் கட்சியினரையே பிரதானமான பார்வையாளர்களாகக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் ஒட்டுமொத்த சந்தையை ஏகபோகமாக வைத்திருப்பது, ஒன்றோடு ஒன்று தொடர்புடைய தொழில்களை வளைத்துப் போடுவது போன்றவற்றைக் கட்டுப்படுத்த சட்டங்களே இல்லாததுதான் இந்தியாவில் மிகப் பெரிய ஆபத்துக்களை உண்டாக்குகிறது. இதன் மூலம் மக்கள் என்ன செய்தியை பார்க்க முடியும், என்ன செய்தியை பார்க்க முடியாது என்பதை ஒரு தனிநபர் தீர்மானித்துவிட முடியும்; ஈழப் பிரச்சனையில் நடந்ததைப் போல. மக்கள் எந்த சேனலை பார்க்க முடியும், எதை பார்க்க முடியாது என்பதைக்கூட ஒரு குறிப்பிட்ட குழுமத்தால் தீர்மானிக்க முடிகிற, தீர்மானிக்கப்படுகிற ஆபத்துக்கு நடுவில் நாம் வாழ்கிறோம். இவ்வாறு அரசியல்மயமாகிவிட்டதால் தமிழ் டிவி உலகிற்கு புரஃபஷனலிசத்தின் வருகை மேலும் தள்ளிப் போகிறது. ஒரு காவல் துறை உதவி ஆய்வாளர் கண் முன்னால் உயிருக்குத் துடிப்பதை தமிழக அமைச்சர்கள் வேடிக்கை பார்த்தார்கள் என்று தேசிய சேனல் மிகப் பெரிய தார்மீக கேள்வி எழுப்பிய போது தமிழக ஊடகங்கள் அதை கண்டுகொள்ளவே . ஆளுங்கட்சி சேனல் அது தங்கள் ஆட்சிக்கு எதிரானது என்பதால் போடவில்லை. நாளிதழ்கள்கூட அந்த சம்பவத்தின் கொடூரத்தை உணராமல் அல்லது அரசு விளம்பரங்கள் குறித்த பயத்தால் அது பற்றி பெரிதாக எழுதவில்லை.
உங்கள் வரவேற்பறையில் அமர்ந்துகொண்டு டிவியில் நீங்கள் பார்க்கும் 'செய்தி' ஏதோ ஒரு கட்சித் தலைவரின் உத்தரவால் உருவாக்கப்பட்ட அப்பட்டமான பொய் என்றால் அல்லது நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு செய்தியை ஏ.சி அலுவலகத்தில் அமர்ந்துகொண்டு ஒரு கட்சித் தலைவரால் தடுத்து நிறுத்த முடியும் என்றால் அது உங்கள் உரிமைகளையே பறிப்பதாகும். இந்த தேசத்தின் நீங்கள் வாழும் பொதுச் சூழல் உங்களுடையது. அதை திரிக்கும், மறைக்கும் எந்த முயற்சியும் சிவில் சமூகத்தின் எதிர்ப்பை சந்திக்க வேண்டிய ஒன்று. ஒரு படத்தைத் தயாரிக்கும் ஒருவர், அவரே நடத்தும் சேனலில், அவரே நடத்தும் டாப் படங்கள் நிகழ்ச்சியில், அவரே நடத்தும் செய்தி நிகழ்ச்சியில் தனது படத்தையே சிறந்த படம் என்று சொல்லி புகழ்வது ஆபாசமானது. எனினும் அரசியல்மயமாகியிருக்கும் ஊடகங்கள் தங்களது வீழ்ச்சியின் பள்ளத்தாக்குகளை விரைவாகவே எட்டுவது நல்லதுதான். அனைவருக்கும் பொதுவான ஊடகங்களின் நம்பகத்தன்மை காணாமல் போகப் போக, ட்விட்டர், புளாக், செல்போன் போன்ற சமூக இணைப்பு ஊடகங்களின் எழுச்சி வேகம் பிடிக்கும். அவற்றின் வளர்ச்சி வேகத்திற்கு உதவும் விஜயகாந்திற்கு நன்றி சொல்வோம்.